"இழந்தவை எல்லாம்
திரும்ப தா என்றேன்
"இழந்தை எவை
என இறைவன் கேட்டான்...
"பலதை இழந்திருக்கிறேன். கணக்கில்லை" என்றேன்
காலமாற்றத்தால் இளமையை இழந்தேன்.
கோலம் மாறி அழகையும் இழந்தேன்.
வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்.
எதை என்று
சொல்வேன் நான்
இறைவன்
கேட்கையில்
எதையெல்லாம்
இழந்தனோ அவை அனைத்தையும்
மீண்டும் தா" என்றேன்..
அழகாக சிரித்தான்
இறைவன்...
கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்
உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்.
*உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்...
நல்ல பண்புகளால்
எதிரிகளை இழந்தாய்.
சொல்ல இது போல் நிறைய உண்டு. அனைத்தையும் தரவா திருப்பி..??" என்றான் இறைவன்.
திகைத்தேன்.
இழப்பின் மறுபக்கம்
எதுவென உணர்ந்தேன்.
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்.
இழந்ததை அறிந்தேன்.
இதயம் தெளிந்தேன்.
இறைவன் மறைந்தான்...
No comments:
Post a Comment