மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல்களை பாடி வழிபட்டால் கஷ்டங்கள்பஞ்சாய் பறந்திடும் என்பர்.
பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் வெகுவாக இருந்து வந்துள்ளது.
தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன.
அவற்றில் தேவாரம்
(7 திருமுறைகள்), திருவாசகம் (திருக்கோவையார்), திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடலையும் எடுத்துப் பாடுவதுதான் ‘பஞ்ச புராணம் பாடுதல்’ எனப்படுகிறது.
சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழக்கம்.இது பஞ்சபுராணம் பாடும் நிகழ்ச்சியிலும் கடைபிடிக்கப்படுகிறது.
பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் “திருச்சிற்றம்பலம்” என்று சொல்ல வேண்டும்.
பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்க” என்ற கந்த புராண வாழ்த்தைப் பாடி நிறைவு செய்ய வேண்டும்.
பொதுவாக, கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு.
சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை பாடுவார்கள் வேதியர்கள்.
அவர்கள் முடித்த பிறகு திராவிட வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள்.
சிலர் பஞ்ச புராணம் பாடுங்கள் என்றும் கூறுவர்.
ஓதுவாரும் அவருக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடுவார்.
அதன் பிறகு வேதியர்கள் தீபாராதனை நிறைவு செய்து விபூதி பிரசாதம் வழங்குவார்கள்.
தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு.
இயலாதவர்கள் வீட்டிலேயே பாரயணம் செய்யலாம்.
விநாயகர் வணக்கம்:
திருச்சிற்றம்பலம்.
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.”
திருச்சிற்றம்பலம்.
திருஞானசம்பந்த-அருளிய தேவாரம்:
திருச்சிற்றம்பலம்.
“தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்
மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம்
கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த
அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்
அன்றே.”
திருச்சிற்றம்பலம்.
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்:
திருச்சிற்றம்பலம்
.
“பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே.”
திருச்சிற்றம்பலம்.
சேந்தனார் அருளிய திருவிசைப்பா:
திருச்சிற்றம்பலம்.
“கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே.”
திருச்சிற்றம்பலம்.
சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு:
திருச்சிற்றம்பலம்.
“பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல்
ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய
தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே
இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு
கூறுதுமே.”
திருச்சிற்றம்பலம்.
சேக்கிழார் அருளிய
பெரிய புராணம்:
திருச்சிற்றம்பலம்.
“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.”
திருச்சிற்றம்பலம்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்:
திருச்சிற்றம்பலம்.
“ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே.”
திருச்சிற்றம்பலம்.
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளியகந்தபுராணம்:
திருச்சிற்றம்பலம்.
“வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.”
திருச்சிற்றம்பலம்.
தினமும் பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல்களை பாடி வழிபடுங்கள். உங்களது கஷ்டங்கள் பஞ்சாக பறந்து போக செய்யுங்கள்.
திருச்சிற்றம்பலம்!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!!
எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி..!! போற்றி..!!
No comments:
Post a Comment