மலர்களை விரும்புபவர்களால் கடவுளை வெறுக்க இயலாது. மலர்களுடன் நெருங்கிப்பழகுபவர்கள் இறைவனுடனும் நெருங்கியிருக்கிறார்கள் என்று பொருள். எல்லா மலர்களுமே இறைவனுக்கு நெருக்கமானவைதான். என்றாலும் கூட, சிலமலர்கள்இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்கத்தக்கவை என்றஉயர்ந்த ஸ்தானத்தைப்பெற்றுவிடுகின்றன. இவற்றை மனிதர்கள்சூடுவதில்லை. அத்தகைய மலர்தான் சங்குபுஷ்பம்!
இறைவனுக்கு மட்டுமே உரித்தான சங்கு புஷ்பத்தை சர்வ சாதாரணமாக எங்கும் காணமுடியும். இறைவன் எங்கும் நிறைந்திருப்பது போல் சங்கு புஷ்பமும் எங்கும் வளர்ந்து, எளிமையாகக் கிடைக்கக் கூடியதாகவே இருக்கிறது. வெண் சங்கு புஷபமும், நீல நிற சங்கு புஷ்பமும் இனி எங்கு கண்களில் தென்பட்டாலும், சிவனையும் விஷ்ணுவையும் சேர்த்து நினைத்துக்கொள்ளுங்கள். வெண் சங்கு புஷபம் சிவனுக்குரியதாகவும், நீலநிறசங்கு புஷ்பம் விஷ்ணுனுக்குரியதாகவும் கருதப்பட்டாலும்கூட, நிறம்மாற்றி அர்ச்சித்தாலும் சிவனும் விஷ்ணுவும் கோபம்கொள்ள மாட்டார்கள்.
சங்கு புஷ்பங்கள் பெண் தெய்வங்களுக்குரியதில்லையா என்ற சஞ்சலமே தோன்ற வேண்டாம். அம்பாளுக்கும்உரிய அற்புதமலர்தான் சங்குபுஷ்பம். பொதுவாகவே, பௌர்ணமியன்று அம்பாள் ஆராதனை மகா விசேஷம்.
சனிக்கிழமையன்று வரும் பௌர்ணமி தினத்தன்று நீலநிறப் புடவை அல்லது நீலநிற வஸ்திரம் சாத்தி, நீல சங்கு புஷபத்தால் அன்னையை அலங்கரித்து அல்லது அர்ச்சனை செய்து, எள்ளு சாதம், தேன் கலந்த பால் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து பக்தர்களுக்கு விநியோகித்து வந்தால், தீராத நோய்களும் தீரும். தீராத, நீண்ட காலங்களாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற மனக் கஷ்டமும் தீரும் என்கிறது ஒரு பூஜை சம்பிரதாயம்.
திருமியச்சூர் ஸ்ரீலலிதாம்பிகையின் அழகு கண்டு ரசிக்காத பக்தர்கள் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அழகோவியமாக அவள் வீற்றிருக்கும் ஆலயத்தில் சதய நட்சத்திரத்தன்று, தாமரை இலைகளில் சங்கு புஷபத்தை வைத்து, அங்கேயே எழுந்தருளியுள்ள ஈசன் மேகநாத சுவாமியைப் பூஜித்து மனம் உருகப் பிரார்த்தனை செய்து கொண்டு, அதே இலையில் வெண் அன்னத்தை நிவேதனம் செய்து அன்னதானம் செய்து வந்தாலும், நாமும் பிரசாதமாக உட்கொண்டாலும் கடும் பிணிகள் காணாமல் போய்விடும் அற்புதத்தை அனுபவிக்கலாமாம்...

No comments:
Post a Comment