வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டுப் பணத்தை ஒரு முட்டையில் கட்டிக் கொண்டு தன் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தான்.
அவன் தன் ஊருக்குச் செல்ல ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தைப் பொருட்படுத்தாத வைர வியாபாரி நீரில் இறங்கி எப்படியாவது ஆற்றைக் கடந்து சென்று விடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ள நீர் அவனை நிலை தடுமாற செய்தது.
இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவற விட்டான்.
உடனே, ‘ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே... யாரேனும் காப்பாற்றுங்கள்’ என்று கதறினான்.
அப்பொழுது அந்த வழியாக வந்துகொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அவன் ஆற்றில் குதித்துக் கடுமையாகப் போராடி பண மூட்டையை மீட்டு எடுத்துக் கொண்டு கரைக்கு வந்தான்.
பின், ‘இந்த பண மூட்டையைக் காப்பாற்ற சொல்லி யாரோ கதறுனீர்களே... நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? நான் உங்கள் பண மூட்டையை மீட்டுக் கொண்டு வந்து விட்டேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சத்தமாக அழைத்தான். ஆனால், வெகுநேரம் ஆகியும் யாரும் அதை பெற்றுக் கொள்ள வரவில்லை.
பிறகு தான் அவனுக்குப் புரிந்தது, அந்தப் பண மூட்டைக்குச் சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டார் என்பது.
*'ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்தப் பண மூட்டைக்குப் பதிலாகத் தன்னைக் காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்திருந்தால் இந்தப் பண மூட்டையை விடுத்து நான் அவரைக் காப்பாற்றி இருப்பேனே.*
ஆனால், அவர் இப்படி செய்து விட்டாரே!' என்று அந்த மீனவன் வருந்தினான்.
இப்படித் தான் நாமும் நம் தேவைகளை இறைவனிடம் சரியாக கேட்காமல் அழியக்கூடிய பணத்தையும் பொருளையும் கொடுக்குமாறு வேண்டுகிறோம்.
இறைவன் நாம் கேட்பதை கொடுப்பதற்க்கு தயாராகவே இருக்கிறார், எதை நாம் கேட்கிறோம் என்பதில்தான் நம் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது.
ஆகையால் கேட்பதை சரியாக கேளுங்கள்.
No comments:
Post a Comment