தர்மசாஸ்திரத்தை செயல் படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்) அணிய வேண்டும். ‘பவித்ரம்’ என்றால் தூய்மை என்று பொருள். இயற்கையாகவே தர்ப்பை தூய்மையானது. பவித்ரம் என்பதே தர்ப்பையின் பெயராக விளங்குகிறது என்கிறது வேதம். பவித்ரம் வை தர்பா என்று சொல்லப்படுகிறது.
பூமியின் ஆகர்ஷண சக்தியைத் தடுக்க தர்ப்பையால் ஆன ஆசனத்தில் அமருவது உண்டு. ஆகாயத்தில் இருக்கும் இடையூறைத் தடுக்க விரலில் தர்ப்பை வேண்டும். கடமையைச் செய்வதற்கான பொருட்களைத் தூய்மைப்படுத்தவும் தர்ப்பையைப் பயன்படுத்துவர். அக்னி பரிசுத்தமானது என்றாலும் அதன் தூய்மையை வலுப்படுத்த தர்ப்பை உதவும்.
ஒரு புல்லைக் கொண்டு செய்யும் பவித்திரம் எனப்படும் தர்ப்பை இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், இரண்டு புற்களைக் கொண்டு செய்யப்படும் தருப்பை தினசரி நடைமுறைகளுக்கும், மூன்று புற்கள் கொண்டு செய்யப்படும் தருப்பை அமாவாசை அன்று செய்யப்படும் நீத்தார் சடங்கு போன்றவற்றிலும், நான்கு புற்களினால் செய்யப்பட்ட தருப்பை கோயில் நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. தருப்பைப்புல்லைப் பொதுவாக பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையன்று சேகரிப்பர். அப்பொழுது அதற்குரிய மந்திரங்கள் உச்சரிக்கப்படும். தர்ப்பைப்புல் கொய்யும் போது சொல்லப்படும் மந்திரம்:
“தேவானாம் பரிஷூதமஸி வர்ஷவ்ருத்தமஸி, தேவபர்ஹிர்மாத்வாஞ்..விவயஹம் ருஹேம!” --- யஜுர்வேதம், தை.ஸ 1.1.2.1
பொருள்: “ தர்ப்பமே, நீ தேவர்களின் பொருட்டு சேகரிக்கப்படுகிறாய், மற்றும் மழையால் வளர்கிறாய். உன்னை அறுப்பதற்கு கத்தியை வைக்கிறேன். உன்னை அறுப்பவனாயினும் நான் குறைவற்றவனாகவே இருக்கவேண்டும். தர்ப்பமே, நீ நூற்றுக்கணக்கான தளிர்களாய் தளிர்த்து இனிது தழைப்பாயாக” என்பது இதன் பொருள். தருப்பையின் நுனிப்பகுதிதான் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தருப்பை மேலும் பல கதிர்வீச்சுகளை அடக்கிவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் சில வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது தருப்பை அணிவது கட்டாயமாகக் கருதப்படுகிறது. பிரஹ்மனின் மூக்கில் இருந்து ஆண், பெண், அலி ஆகிய மூன்று வடிவில் தர்ப்பை தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்ப்பை என்றும், மூலஸ்தூலம் உடையது அலி தர்ப்பை என்றும், அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது ஆண் தர்ப்பை என்றும் பிரித்து அறியப்படும். அடி தர்ப்பையில் பிரம்மனும் இடையில் சிவனும் முனையில் விஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம். தேவ தர்ப்பணத்திற்கு நுனியாலும், மனித தர்ப்பணத்திற்கு மத்தியாலும், பித்ரு தர்ப்பணத்திற்கு மடித்து நுனியாகவும், தர்பணாதிகள் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் வரையறுத்துள்ளது. ஜபம் மற்றும் தானம் செய்யும்போது தர்ப்பபாணியாக இருக்க வேண்டும். தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ, அதே போல் தர்ப்பை அணிந்திருப்பவனிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்ம சாஸ்திரம். உபாசனையில் ஜபம் மற்றும் வேள்வியைச் செய்ய விடாமல் தடுக்கும் கண்ணுக்குப் புலப்படாத அரக்கர்கள், நம் கையில் உள்ள தர்ப்பையைப் பார்த்ததும் விலகி ஓடுவர். முன்னோர் ஆராதனையில் அரக்கர்களை விரட்ட, விருந்து படைக்கும் இடத்தை தர்ப்பையால் துடைப்பது உண்டு. பூதம், பிசாசு, பிரம்மரஷஸ் ஆகியவை விரலில் தர்ப்பையைப் பார்த்ததும் மிரண்டு ஓடி விடும். ஆகவே தூய்மை வேண்டியும் இடையூறுகளை அகற்றவும், தர்ப்பை அணிய வேண்டும். தர்ப்பை அணியும் விரலை, ‘பவித்ர விரல்’ என்கிறோம். மின்சாரம் பாயாத பொருட்களில் தர்ப்பையும் ஒன்று. ஆனால், மின்சாரத்தை விட பலமடங்கு செயல்திறன் கொண்டது தர்ப்பை.
விஸ்வாமித்ரப்புல் (லெமன் கிராஸ்) என்ற ஒரு புல் வகை இருக்கிறது. தர்ப்பைக்கு நிகராக விஸ்வாமித்ரரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புல் வகை எனக் கூறுவார்கள். இந்தப் புல்லினால் செய்யப்பட்ட இருக்கைகளை உபயோகப்படுத்தும் போது கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்கிரகங்களையும், பாத்திரங்களையும் துலக்க வேண்டும். உபாசனைக்கு எல்லா விதமான ஆசனங்களை விடவும் தர்ப்பாசனம் சிறந்தது. கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் கெடாமலிருக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள். திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. தருப்பைப் புல்லுக்குச் சப்ததோஷம், அற்பவீரியவிஷம், கபாதிக்கம், சர்வசுரம், தாகம், நமைச்சல் ஆகியவை போகும்.. மேலும் இந்துமத வைதீகக் காரியங்களைச் செய்ய மிகவும் அத்தியாவசியமானது.
தர்ப்பைப்புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு, ‘அக்னி கர்பம்’ என்ற பெயரும் உண்டு. இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு, ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அப்படி செய்தால் அவற்றின் ஓசை திறன் குறையாமல் இருக்கும். தர்ப்பைப்புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது. நீருக்குள் பல நாட்கள் கிடந்தாலும் அழுகாது. சூரிய கிரகணம் ஏற்படும்போது இதன் வீரியம் அதிகமாக இருக்கும். இதன் காற்றுபடும் இடங்களில் தொற்று நோய்கள் வராது.
தர்ப்பைப்புல்லுக்கு மந்திர சக்தியை உள் வாங்கிக் கொள்ளும் தன்மை மிக மிக அதிகம். இது தீய எண்ணங்களையும் கர்ம வினைகளையும் நம்மிடம் ஒட்டாமல் இருக்க உதவுகிறது. சிறந்த புனிதமான தெய்வீக சக்தியைக் கொண்ட தேவர்களும் பித்ருக்களும் நம் கண்களுக்கு தெரியாத ஒளி ரூபத்தில் வந்து அந்த தர்ப்பையில் அமர்கின்றனர். தர்ப்பையைத் தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும், பயன்படுத்துவார்கள். தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது. மேலும் பஞ்சலோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள். அதை நாடி சந்தானம் அல்லது உயிர் கொடுத்தல் என்று சொல்வார்கள். உபாசனையின் போது கையில் ஒரு பிடி தர்ப்பையும், ஆசனமாக நான்கு பிடி தர்ப்பையையும் வைத்து மந்திரம் சொல்ல எல்லா தேவதைகளையும் தொடர்பு கொண்டு பல்வேறு செய்திகளை அறியலாம். நன்கு உரு ஏற்றிய தர்ப்பையை எரித்துச் சாம்பலாக்கி அதில் சிறிது நெய் விட்டு மை போல குழைத்து புருவங்களில் தடவ எல்லாவிதமான தோஷங்களும் விலகி ஓடும். ஜன வசீகரம் ஏற்படும். பொதுவாக யாகங்களின் முடிவில் இதையாக ரட்சையாகச் செய்வார்கள்.
No comments:
Post a Comment